27 April 2006

'அவாள்'களுக்கு 'டாட்டா' காட்டுகிறார் தயாநிதி மாறன்!

சும்மாவே 'இவாள்'களுக்கு திமுக என்றால் எட்டிக்காய்; இப்போது ஜெ. மாமியின் தமிழக (கொடுங்)'கோல்' ஆட்சியைத் தக்க வைக்க முடியாமற் போய் விடுமோ என்கிற பயமும் சேர்ந்து கொண்ட பின்னர் கேட்கவா வேண்டும்?!

தயாநிதி மாறன் 'டாட்டா குழுமத்தை' DTH விசயத்தில் மிரட்டினார் என்று 'சும்மா' கொளுத்திப் போட்டு - அதற்குத் தங்கள் ஆஸ்தான குரு சோ -வின் ஆதிசேட நாக்கை வேறு பயன்படுத்திப் பார்த்தார்கள்!

'குரு கோல்வால்கருக்கு' அஞ்சலி செலுத்தும் தமிழகத்தின் 'ஒரே நடுநிலைப் பத்திரிக்கை'யான தினமணியில் கம்பு சுத்திப் பாத்தாச்சு! அவங்கப்பன் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிலும் அலம்பல்கள்! போதாததற்கு 40 கோடி (150 கோடி??!) புகழ் கோமாளியும் ஊளைக்கு ஒத்து வேறு!

என்னடா விசயமென்றால் - 'அதாவதுங்கய்யா சம்பவம் நடந்த எடத்துல இருந்து நான் திரும்பி வர்றப்ப ஒரு பத்துமைல் தூரத்தில தயாநிதி மாறன் வீடு இருந்துச்சுங்கய்யா' ரேச்ஞ்சில முழநீள பதிவுகள்!!! ;) (எல்லாம் இடஒதுக்கீடு அறிவிப்புப் படுத்தும் பாடு!! - என்னப்பா தமிழ்நாட்டில ஒரு டாக்டரும் தெருவில போராடக்காணமே! ;) )


தயாநிதி மாறன் - தன்னைப் பற்றிய பற்றிய செய்தி அவதூறு என்றும் - அதை வெளியிட்டதற்காக - 'தினமணி' ஆசிரியரும், 'தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ்' நிர்வாக இயக்குநரும் - தன்னிடம் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் - தவறினால் ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்குத் தொடரப் போவதாகவும் அறிவித்துள்ளார்.

தினகரனில் இன்று(27/04/06) வெளிவந்திருக்கும் அந்தச் செய்தி இங்கே :

"டாடாவை மிரட்டினார் தயாநிதி மாறன்" என்ற பெயரில் தினமணியிலும், எக்ஸ்பிரஸ் இன்வெஸ்டிகேஷன் என்ற பாணியில் தி இண்டியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிலும் 26.4.2006 அன்று வெளியான கட்டுரை விஷமத்தனமாக உள்ளது. இந்தக் கட்டுரையில் வெளியான தகவல்கள் கற்பனையானவை, பொய்யானவை, அற்பத்தனமானவை.

உங்கள் செய்தியில் வெளியாகியுள்ள தகவல்கள் நிரூபிக்கப்படவில்லை. சந்தேகங்களையும், ஐயப்பாடுகளையும் எழுப்பிவிட்டு அவற்றுக்கு பாதிக்கப்பட்டோரே பதில் சொல்ல வேண்டும் என்று கூறுவதை ஏற்க முடியாது.

தயாநிதி மாறனைப் பிடிக்காத சிலரின் கட்டளைப்படி நேர்மையற்ற முறையில் புரளிகளைப் பரப்பி ஆதாயம் அடைவதற்காக இந்தக் கட்டுரையை வெளியிட்டு உள்ளீர்கள். அவர் பதில் அளிக்க மறுக்கும் விஷயங்களை தயாநிதி மாறன் மறுக்க வேண்டும் என்கிறீர்கள்.

இதுகுறித்து பிரஸ் கவுன்சிலிடம் தயாநிதி மாறன் புகார் செய்வார். தேர்தல் சமயத்தில் இது போன்ற அவதூறான கட்டுரையால் அவர் சார்ந்துள்ள கட்சிக்குப் பாதிப்பு ஏற்படலாம்.

உங்கள் கட்டுரையில் கூறப்பட்டுள்ள ஒவ்வொரு விஷயத்தையும் தயாநிதி மாறன் மறுக்கிறார்.
மேலும் சன் டி.வி சம்பத்தப்பட்ட எந்த விஷயத்திலும் தனக்கு ஆர்வமில்லை. தனது பெயரை இந்த விஷயத்தில் தேவையின்றி இழுத்து சேற்றை வாரி இறைப்பதாகக் கூறுகிறார்.

எனவே எனது கட்சிக்காரரிடம் (தயாநிதி மாறன்) நீங்கள்: நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்க வேண்டும். அத உங்கள் பத்திரிக்கையில் பிரதான இடத்தில் வெளியிட்டுக் களங்கம் கற்பித்ததற்கு நஷ்ட ஏடாக ரூ. 1 கோடி தரவேண்டும்.

இதைச் செய்யத் தவறினால் சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும். அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு நீங்கள் பொறுப்பு ஏற்க வேண்டியது இருக்கும்."


கார்த்திக்கும் அவரது பார்வர்டு பிளாக் கட்சிக்காரர்களும் தொடர்ந்து மிரட்டப்படுவது - ஒரு வேட்பாளர் தற்கொலைக்குத் தூண்டப்பட்டது, எம்ஜியாரின் அண்ணன் மகள் லீலாவதி மிரட்டி துன்புறுத்தி ஆண்டிப்பட்டியில் வேட்புமனு தாக்கல் செய்வதிலிருந்து தடுக்கப்பட்டது, தேமுதிக வேட்பாளர்கள் விலைபேசப்படுவது - என தொடரும் 'அவாள்' திமுக-வின் லீலைகளில் இந்த அவதூறு செய்தியும் ஒன்றாகிறது போலும்!

வழக்கம்போல - 'இவாள்' இதையும் இருட்டடிப்புச் செய்வாள் பாருங்கோ! ;)

23 April 2006

பொடாவுக்காக ஜெ. மன்னிப்புக் கேட்டாரா? - சுபவீயின் செவ்வி


'இந்துத்துவத்தின் இன்னொரு முகம்' ஜெயலலிதா என்று அடித்துச் சொல்லுகிறார் பேராசிரியர் சுபவீ அவர்கள் - தினகரனில் இன்று(22/4/06) வந்துள்ள செவ்வியில்; செவ்வியின் சுட்டி


ஒரு கூடுதல் செய்தி :

சுபவீ திமுக அணியை ஆதரித்து தேர்தல் பிரசாரச் சுற்றுப்பயணம் செய்யப் போகிறார்; அதன் விவரம் இங்கே படிக்கவும்

:)

22 April 2006

எலிசபெத்தின் காதல்!

சில வருடங்கட்கு முன்பு எலிசபெத் பாரெட் ப்ரவுனிங்(Elizabeth Barrett Browning) என்கிற பிரபலமான ஆங்கிலப் பெண் கவிதாயினியின் 'சானட்ஸ் ஃபிரம் த போர்ச்சுகீஸ்' (Sonnets from the Portuguese) என்கிற தொகுப்பைப் படிக்க நேர்ந்தது.

விக்டோரியன் காலகட்டத்தில் வாழ்ந்த மாபெரும் பெண் கவிஞராக எலிசபெத் மதிக்கப்படுகிறார். அவரை விடவும் வயதில் இளையவரான ராபர்ட் ப்ரவுனிங் (Robert Browning) என்கிற இன்னொரு பிரபலமான கவிஞரை காதலித்து மணந்தவர் எலிசபெத்.

'சானட்ஸ் ஃபிரம் த போர்ச்சுகீஸ்' என்கிற கவிதைத் தொகுப்பே எலிசபெத் தன் ஆருயிர்க் காதலனை எண்ணி உருகி உருகிப் பாடியதுதான்! படிப்பவர்களையும் உருக வைப்பது; உயிர்ப்புள்ள கவிதைகள் அவை.

அந்தத் தொகுப்பின் 43-ஆம் பாடலை தமிழில் மொழி ஆக்கம் செய்து பார்க்கும் ஆசை வந்தது! இதைச் செய்தும் இப்போது சில காலங்கள் ஆகின்றன; அந்த மொழி ஆக்கக் கவிதையை (முயற்சியை) இங்கே தருகிறேன்.

எலிசபெத்தின் 'மொழியாளுமை' எளிய சொற்களின் மூலம் வலிய வளமான படிமங்களைக் உருவாக்க வல்லது. புலனறிவு கடந்த இறைமைத் தேடலின் 'ஆன்மா' இக்கவிதைகளில் 'சூல்' கொண்டுள்ளது என்பர். நான் மொழியாக்கத்திற்கு நமது புதுக்கவிதை வடிவத்தை முயன்று பார்த்திருக்கிறேன். இனி மொழியாக்கக் கவிதை :


'சானட்ஸ் ஃபிரம் த போர்ச்சுகீஸ்' - 43


உன் மீதான என் காதலை எப்படி விரித்துரைப்பேன்?
என் காதலென்னும் வேகப்புரவி...
உணர்வென்னும் சமவெளியில் புரண்டு சிலிர்க்காமல்
மொழியென்னும் தொழுவத்தில் அடைபடச் சம்மதிக்குமா?!

விம்மிப் புடைத்து நிற்கும் என் ஆன்மாவின் ஒவ்வொரு அணுக்களிலும்
எல்லையற்ற உன் நினைவுகள் வியாபித்திருக்கின்றன...
பகலும் இரவும் காதலால் என்னை ஒளியூட்டும் உன் பெயரென்னும் விண்மீன்!

கட்டற்ற காற்றாய் என் காதல் வந்துன் சுவாசமாகட்டும்
புனிதமான என் நேசம் கார்மேகமாய் சூல் கொண்டு
உன்னைக்கண்டதும் மழைக்கத்தொடங்குகின்றன
என் பழைய காயங்கள் உனைக் கண்டதும் இமை மூடுகின்றன

உன் மீதான காதல்
இழந்துபோன என் பழைய புதையல்களை மீட்டெடுத்துவிட்டது!
இறந்துபோன நம்பிக்கைகளுக்கும் 'மீட்சி' தந்தது!

என் மூச்சின் காற்றாய் நீ!
என் புன்னகையின் ஆன்மாவாய் நீ!
என் கண்ணீரின் ஜீவ ஊற்றாய் நீ!
என் வாழ்க்கையின் மூல வேராய் நீ.. நீதான் இருக்கின்றாய்!
என் 'மெய்' - 'பொய்'யாகிப் போன பின்னும்
பிரபஞ்சத்தின் கைகளால் உனைத் தழுவிகொள்வேன் -
இன்னும் இறுக்கமாய்!


********************************


பின்வருவது எலசபெத்தின் மூலக் கவிதை:

Sonnets from the Portuguese: 43

How do I love thee? Let me count the ways.
I love thee to the depth and breadth and height
My soul can reach, when feeling out of sight
For the ends of Being and ideal Grace.
I love thee to the level of every day's
Most quiet need, by sun and candlelight.
I love thee freely, as men strive for Right;
I love thee purely, as they turn from Praise.
I love thee with the passion put to use
In my old griefs, and with my childhood's faith.
I love thee with a love I seemed to lose
With my lost saints, -- I love thee with the breath,
Smiles, tears, of all my life! -- and, if God choose,
I shall but love thee better after death.

- Elizabeth Barrett Browning

21 April 2006

கலைஞரால்தான் பொடா சிறையிலிருந்து வெளியே வந்தோம் - சுபவீ

வில்லிவாக்கத்தின் திமுக வேட்பாளரை ஆதரித்து அம்பத்தூரில் நடந்த பொதுக்கூட்ட்டத்தில் பேராசிரியர் 'அடலேறு' சுபவீ அவர்கள் பேசியிருக்கிறார் :

* கலைஞரின் முயற்சியால்தான் - நானும், வைகோவும் மற்ற பொடாவில் கைது செய்யப்பட்டவர்களும் சிறையிலிருந்து வெளியே வந்தோம்

* வைகோ சிறையிலிருந்த போது எழுதிய நூல்கள் சிறப்பானவை;ஆனால் இப்போது அதற்கு நேர் எதிராக அவர் செயல்பாடுகள் உள்ளது. எனவே வைகோவின் நூல்களைக் கொளுத்தவேண்டும்.

* ஜெ. தமிழின அடையாளங்களுக்கு எதிரானவர்; அவரை விமர்சிப்பவர்களைக் கொலை கூடச் செய்து விடுவார்.

* தமிழகத்தில் சனநாயகம், தமிழின உணர்வு ஆகியவை தழைத்தோங்க திமுக கூட்டணிக்கே தமிழக மக்கள் வாக்களிக்க வேண்டும்.

கூட்டத்தில் கவிஞர் அறிவுமதி, இயக்குநர் சீமான் - ஆகியோரும் கலந்து கொண்டனர்.

கமல்ஹாசனுக்கு அதிமுக மிரட்டல்?

நேற்று கலைஞர் தூத்துக்குடியில் பேட்டியளிக்கும்போது, ஒரு பிரபல நடிகருக்கு அதிமுக 100 கோடி ரூபாய் தருவதாகவும், அதை வாங்கிக் கொண்டு அதிமுக-வுக்கு தேர்தல் பிரச்சாரம் செய்யும்படியும் வியாபார பேரம் போல் பேசியதாகவும் - ஆனால் அந்த நடிகர் அதை ஒப்புக்கொள்ள மறுத்துவிட்டதாகவும் தெரிவித்தார்.

அந்த நடிகர் யார் என்பதை பத்திரிக்கையாளர்களிடம் தெரிவிக்கவில்லை கலைஞர்.

இன்றைய ((ஏப்.21) தினகரனில் - அது கமல்ஹாசன்தான் என்றும், அவர் 100 கோடி ரூபாய் வாங்கிக் கொள்ளவோ, மருதநாயகத்துக்கு பண உதவி - இன்னபிற உதவிகளை செய்வதாக அதிமுக சார்பில் பேசிய (சசிகலா) நடராஜனின் பேரத்தை அடியோடு மறுத்து விட்டதாகவும் - செய்தி வெளியிட்டு உள்ளார்கள்.

தொடர்ந்து கமல் மறுத்ததால் அழுத்தமாக மிரட்டல் தொனியில் வற்புறுத்தல்கள் வந்திருக்கின்றன. இதனால் கமல் 20 ஆம் தேதி இரவே அமேரிக்கா சென்றுவிட்டார் என்றும் செய்தி வந்துள்ளது.

கமலையே 'விலைக்கு வாங்க' நடந்திருக்கும் இந்த காட்டுமிராண்டிகளின் முயற்சி அம்பலத்துக்கு வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் செய்தி உண்மையானால்
...... 'டாக்டர் கோவூர்' விருது பெற்ற பகுத்தறிவாளர் கமல் - இது போன்ற குதிரை வியாபாரங்களுக்கு விலைபோக மாட்டார் என்று நான் நம்புகிறேன். இப்படி விலை போய்த்தான் 'மருதநாயகம்' எடுக்க வேண்டுமென்றால் அந்தப் படமே தேவையில்லை.

மேலும் நம்முடைய நாராயணன(உருப்படாதது) அவர்கள் முன்பு எழுதியது போல - வெளிநாட்டு பட நிறுவனங்கள் மூலம் நிதி திரட்டியாவது அவர் அந்த உன்னதப் படைப்பைச் செய்யட்டும். இந்த தமிழின விரோதிகளிடம் அவர் தன் பெருமையை இழக்காதிருக்கட்டும்.

இம்மாதிரியாகக் கேவலமாக அவரை விலை பேசிய கும்பலுக்கு தேர்தலுக்குப் பின் உரிய விளைவுகளைச் சந்திக்கிற நிலை வரத்தான் போகிறது.

19 April 2006

பச்சரிசிகளும், 'புழுத்த' அரிசிகளும்!

கடந்த இரண்டு வாரங்களாக தி.மு.கவின் தேர்தல் அறிக்கையிலே தெரிவித்திருந்த, தொடர்ந்து கலைஞர் வாக்குறுதி அளித்து பிரச்சாரம் செய்த 'ஒரு கிலோ இரண்டு ரூபாய்' பொது விநியோக அரிசித் திட்டத்துக்கு ஜெ.வும், 'வையகத்தின் கோமாளியும்' கடும் எதிர்ப்பும், கிண்டலும் செய்தபடி இருந்தனர்.

இப்போது தமிழக முதல்வர் திடீரென ஒரு 'சந்துமுனையில்' நின்றபடி 10 கிலோ அரிசி வாங்கினால் 10 கிலோ இலவசம் என்கிறார், ஒரு முதலமைச்சர் 'கொள்கை முடிவுகளை' இப்படி அறிவிக்கக் கூடாது என்கிற வரம்பையும் மீறி!

அதற்கும் சில அறுந்த வால் வானரங்கள் தாண்டிக் குதித்து குட்டிக்கரணம் இட்டு மகிழ்ச்சி ஊளையில் திளைக்கின்றன! இத்தனை சனநாயக விரோதப் போக்கும் தமிழின விரோதக் கும்பலால் நடத்தப் படுகின்றன.

இதிலே முழு உண்மை என்ன? என்று தெரிந்து கொள்ள விரும்புவோர்க்கு :


1. மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் தெளிவான விளக்கம்


2. மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் தெளிவான கூடுதல் விளக்கம்(தினமணி)


3. கலைஞரின் கருத்து


4. கலைஞரின் கவிதை



5. அரசியல் தலைவர்கள் கருத்து

17 April 2006

'பரம்பரைப் பகையை' எதிர்கொள்ள இனமான வீரர்கள் அணிவகுப்பு!

'பரம்பரைப் பகை' என செயலலிதா வெளிப்படையாகவே அறிவித்திருப்பதை தமிழினத்துக்கு விடப்பட்ட அறைகூவலாகவே இன உணர்வாளர்கள் கருதுகின்றனர் என்பது உறுதி. திராவிடர் கழகத் தலைவர் வீரமணீ அவர்கள் 18 ஏபரல் முதல் தி.மு.க கூட்டணியை ஆதரித்து தமிழகமெங்கும் பிரச்சாரம் செய்யப் போவதாக அறிவித்திருக்கிறார்.

1990-களில் 'தடாவில் கைதாகி சிறைவாசம் செய்தவரும், பிறகு 2002-ஆம் ஆண்டு 'பொடா'வில் கைதாகி ஒன்றரை ஆண்டு காலம் வெஞ்சிறையில் இன உணர்வுக்காகவும், ஈழ விடுதலை உணர்வுக்காகவும் வாடிய - பேராசிரியர் 'அடலேறு' சுப.வீரபாண்டியன் அவர்களும் - தமிழின விரோத செயலலிதாவை தமிழக அரசியல் அரங்கிலிருந்தே வெளியேற்றுவோம் என்கிற முழக்கத்தோடு களத்தில் குதித்திருக்கிறார்.

இரண்டு நாட்களுக்கு முன் சுபவீ வெளியிட்டுள்ள அறிக்கை:

"பொடா சட்டத்தின் கீழ் ஒன்றரை ஆண்டு சிறையில் கிடந்த தமிழன் என்னும் அடிப்படையில் தமிழ் மக்களிடம் என் வேண்டுகோளை முன் வைக்கிறேன்.

பொடாவை மறந்து விட்டோம் என நண்பர்கள் சிலர் கூறுகின்றனர். அது நமக்கும் செயலலிதாவுக்கும் இடையிலான தனிப்பட்ட பகை என்றால் மறந்து விடலாம்.

தமிழினத்துக்கும், தமிழீழ உறவுக்கும் எதிராக அவரால் தொடுக்கப்பட்ட போர்ப்பிரகடனம் அல்லவா அது? - என்பதால் என்னால் மறக்க முடியவில்லை.

தமிழர் தேசிய இயக்கத்தை தடை செய்து, கண்ணகி சிலை போன்ற தமிழ் அடையாளங்களை அப்புறப்படுத்தி, தமிழ் உணர்வாளர்களை எல்லாம் பயங்கரவாதிகளாக சித்தரித்து, தமிழகத்தின் தமிழ்த் தெருவில் தமிழே இல்லாமல் பார்த்துக் கொண்ட தமிழ் இன எதிரி செயலலிதாவின் கொடுங்கோல் ஆட்சி இனியும் இந்த நாட்டில் நீடிக்கக் கூடாது.

'பரம்பரை எதிரியோடு தேர்தலில் மோதுகிறேன்' என்று செயலலிதாவே சொன்னபிறகு, அந்த அறைகூவலை நாமும் ஏற்போம். பரம்பரை எதிரியைத் தேர்தல் களத்தில் எதிர்கொள்வோம்.

சர்வாதிகார ஆட்சி ஒழியவும், சனநாயக ஆட்சி மலரவும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தி.மு.க கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய உள்ளேன்.

தமிழ் இன உணர்வாளர்களே - நீங்களும் களத்துக்கு வாருங்கள். கைகோர்த்து நிற்போம். "

இவ்வாறு தெரிவித்திருக்கிறார் சுபவீ.

சனவரித் திங்களில் ஒரு சாலை விபத்தின் காரணமாக காயமடைந்து இப்போதுதான் தேறி வந்திருக்கும் சுபவீ அவர்களின் இன உணர்வுப் போராட்டம் வாழ்த்துக்கும் வணக்கத்துக்கும் உரியது.

'பரம்பரைப் பகையை' வேரறுக்க இன உணர்வுப் போர் வீரர்களும், படைத்தலைவர்களும் அணிவகுப்பது தமிழினத்தின் விடியலைக் கட்டியங்கூறும்; நாளை வெற்றி முரசம் ஒலிக்குமென்கிற நம்பிக்கை தரும் மகிழ்ச்சிச் செய்தி.