28 January 2011

தமிழ்நதியின் பெருக்கில் அடித்துச் செல்லப்படும் புளுகு மூட்டைகள்

தமிழ்நதி அவர்களின் வலைப்பக்கங்களில் படித்த மிக இன்றியமையா, காலத்துக்குத் தேவையான கட்டுரையை இங்கே பதிவு செய்கிறேன். முழுமையாக...

இதைப் பதிவிட்ட தமிழ்நதிக்கு நன்றிகள் பல உரித்தாகும்.

சுகுணா போன்ற "Intellectual Masturbation" செய்யும் "பின் நவீனத்துவ" (அதாவது குண்டிப்புறத்துவ) வியாதிகள் இதற்குப் பதில் சொல்ல முடியாது.

ஒரே மூச்சில் நக்சல்பாரிகளுக்கு பூக்கொத்தும், புலிகளுக்கு கத்திக்குத்தும் விடும் - சாகசம் செய்வதில் - இந்து ராம்களுக்கும் - இந்த முற்போக்கு வாந்திகளுக்கும் ஒரு வேறுபாடும் இல்லை.

தமிழ்நதியின் பதிவு:

http://tamilnathy.blogspot.com/2011/01/blog-post.html

ஷோபா சக்தி, சுசீந்திரன் உள்ளிட்ட‌ ஆதிக்க சாதியினரின் ‘புலி’த் தீண்டாமை!!

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் ஈழ மீனவ சமுதாயத்தின் கரையாளர் பிரிவைச் சார்ந்தவர் என்பதும், ஈழத்தில் மீனவர்கள் தீண்டத்தகாதவர்கள் என்பதும் பல பேர் அறியாத செய்தி. புலிகள் அமைப்பு ஈழத்தில் வலுப்பெறும்வரை, தமிழர்களின் தலைமை வெள்ளாள ஆதிக்க சாதியிடம் இருந்தது. அவர்கள் சாதிஒடுக்குமுறை குறித்து எந்தவொரு அக்கறையும் கொண்டிருக்கவில்லை.

தமிழர்களின் தனிப்பெரும் சக்தியாக புலிகள் வளர்ந்தபோது, சாதி ஒதுக்கலுக்கு எதிராக புலிகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் (இயக்கத்தில் கலப்புத் திருமணம்தான் செய்ய வேண்டும்; இயக்கத்தில் தீண்டத்தகாத மக்களுக்கு முக்கிய பொறுப்புகள், தீண்டாமைக் குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள்) வெள்ளாள சாதியினரிடம் இயல்பாகவே ஆத்திரத்தை மூட்டியதில் ஆச்சரியமில்லை.

அந்த ஆத்திரத்தில் தொடங்கியதுதான் முக்கால்வாசி புலி எதிர்ப்பு அரசியல் என்று வளர்மதி (கீற்று கட்டுரைகள்) கூறுவது ஆராயப்பட வேண்டியது.

நான்காம் கட்டப்போரில் புலிகள் இயக்கம் முற்று முழுதாக தோற்றபின்பு, ஈழ மக்களின் சம உரிமைகளுக்காக ஒரு துரும்பையும் அசைத்துப் போடாத - இன்றும் புலி எதிர்ப்பு அரசியல் மட்டுமே பேசிக்கொண்டிருக்கும் அகிலன் கதிர்காமர், சுசீந்திரன், டக்ளஸ் தேவானந்தா, ஷோபா சக்தி இவர்களின் சாதி பின்புலத்தைப் பார்த்தோமானால் எல்லோரும் ஆதிக்க சாதி வெள்ளாளர்கள்.

தலித் அரசியலை முன்வைத்து இவர்கள் பேசும் புலிஎதிர்ப்பு அரசியலுக்குப் மாற்றாக பிரபாகரன், தமிழ்ச்செல்வன் ஆகியோரின் ஒடுக்கப்பட்ட‌ சாதிப் பின்புலம் குறித்தும், புலிகளின் சாதியொழிப்பு நடவடிக்கைகள் குறித்தும் பேச வேண்டிய அவசியம் இங்கிருக்கும் ஈழ ஆதரவாளர்களுக்கு இருக்கிறது.

தலித் முரசு 2001 ஜனவரி இதழுக்கு அளித்த பேட்டியில் பழ.நெடுமாறன் இதுகுறித்துப் பேசியிருக்கிறார்.

"... ... இந்தியாவில் எப்படி பார்ப்பனர்கள் ஆதிக்க சாதியாக இருக்கிறார்களோ, அதேபோல் ஈழத்தில் வெள்ளாளர்கள் ஆதிக்க சாதியாக இருக்கின்றனர். ஈழத்தில் ‘இலங்கைத் தமிழர் காங்கிரஸ்’ என்றொரு கட்சி துவங்கிய காலத்தில் இருந்து இறுதியாக ‘தமிழர் விடுதலைக் கூட்டணி’ வரை ஏற்பட்ட தலைமை அனைத்தும் – வெள்ளாளர் தலைமைதான். இவர்களை மீறி யாரும் எதுவும் செய்ய முடியாது. போராளி இயக்கங்களான ஈ.பி.ஆர்.எல்.எப்., டெலோ, பிளாட் என எல்லா தலைமையும் வெள்ளாளர் தலைமைதான்.
இதில், விடுதலைப் புலிகளின் தலைமை மட்டும்தான் மாறுபட்டது। விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், தாழ்த்தப்பட்ட மீனவ சமூகத்தைச் சேர்ந்தவர் (மீனவர்கள் அங்கு தீண்டப்படாத சமூகமாகும்). அதனாலேயே இவர்கள் பிரபாகரனை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள். ‘பிரபாகரனை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்’ என்று என்னிடமே வெளிப்படையாக பேசியும் இருக்கிறார்கள்.


அமிர்தலிங்கம் ஒரு பெரிய தலைவர்। அவரிடம் நான் பேசிக்கொண்டிருக்கும்போது, ‘பிரபாகரனை நீங்கள் இணைத்துக் கொள்ள வேண்டும்; அதுதான் சரியானது’ என்றேன். அப்போது அவருடைய மகன் குறுக்கிட்டு, பிரபாகரனின் சாதியைப் பற்றி மிகவும் மோசமாக ஒரு வார்த்தையை சொல்லித் திட்டினார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. அமிர்தலிங்கமும் மழுப்பி விட்டார்.

பிறகு இதுகுறித்து நான் விசாரித்தபோதுதான், எனக்கு உண்மைகள் தெரிய வந்தன। சாதி ஒரு முக்கியமான காரணம். ஒரு ஆதிக்க சாதியின் பிடி போவதில் அவர்களுக்கு ஒரே கோபம். ஆனால் இன்றைக்கு இதை எல்லாம் தாண்டி பல தரப்பட்ட மக்களும் ஏற்றுக் கொள்ளக்கூடிய தலைவராக பிரபாகரன் மலர்ந்திருக்கிறார். விடுதலைப் புலிகள் இயக்கத்தை – சாதிக்கு அப்பாற்பட்ட இயக்கமாக உருவாக்கியிருக்கிறார்கள்.

எல்லா சாதியைச் சார்ந்த இளைஞர்களும் இதில் உள்ளனர்। அதுமட்டுமல்ல இயக்கத்தில் திருமணம் செய்து கொள்வதற்குக்கூட இரண்டு நிபந்தனைகள் உண்டு. 1.சாதி மறுப்புத் திருமணம். 2.விதவைத் திருமணம். இயக்கத்தில் எல்லாத் திருமணங்களும் அப்படித்தான் நடைபெறுகின்றன. அது வேகமாகப் பரவி வருகிறது. இதன் மூலம் மக்கள் மத்தியில் இக்கருத்து செயல்வடிவம் பெற்று வருகிறது.

விடுதலைப் புலிகளின ஆதிக்கத்தில் இருக்கிற பகுதிகளில் எல்லாம் தீண்டாமையை அடியோடு ஒழித்து விட்டார்கள். சாதிவெறியுடன் யாராவது பேசினால், செய்தால் கடுமையான தண்டனையை புலிகள் விதித்து வருகின்றனர். அங்கு நடைபெறும் போராட்டம் வெறும் அரசியல் போராட்டமாக நடைபெறவில்லை; அது சமூகப் போராட்டமாகவும் ஒரே நேரத்தில் நடைபெறுவதால், இதெல்லாம் அங்கு சாத்தியமாகிறது..."
ஆனால் அதற்குப் பின் - ஷோபா சக்தி, அ।மார்க்ஸ் போன்றோர் உண்மையைத் திரித்து பொய்களைக் கட்டவிழ்த்தபோது - தமிழ்த் தேசியவாதிகள் போதுமான அளவு எதிர்வினையோ, உண்மையைக் கவனப்படுத்தும் கருத்துக்களையோ வெளிப்படுத்தவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பின் அண்மையில் மீனவர்கள் மாநாடு ஒன்றில் திருமாவளவன் இதுகுறித்துப் பேசியிருக்கிறார். ஆனால் அவருக்கு எதிராக - பிற்போக்குத் தன்மை கொண்ட தமிழ்த் தேசியவாதிகள் சிலர் ‘எப்படி பிரபாகரன் மீது சாதி அடையாளம் பூசலாம்’ என்று முண்டாசு கட்டி கிளம்பிவிட்டார்கள். அதற்கு திருமாவளவன் இந்த வாரம் குமுதம் ரிப்போர்ட்டரில் (20.1.2011) பதில் அளித்துள்ளார்.


"... .... மறுநாள் காலையில் பிரபாகரனைப் பார்க்க அழைத்துச் செல்லப்பட்டேன்। முதல்நாள் நான் அண்ணனிடம் கொடுத்திருந்த எங்கள் கட்சியின் 'தாய்மண்' இதழ்களை அவர் படித்துவிட்டு வந்திருந்தார். 'தாய்மண் இதழ்களைப் படித்துவிட்டு இரவெல்லாம் எனக்கு மன உளைச்சலாக இருந்தது. ஒரு மனிதன் இன்னொரு மனிதனின் வாயில் மலத்தைத் திணிக்கின்ற அளவிற்கு தமிழகத்தில் சாதி அவலங்கள் தொடர்வதை நினைத்தால் வேதனையாக இருக்கிறது. தமிழ்நாட்டுத் தலைவர்கள் எப்படி இதை சகித்துக் கொள்கிறார்கள்?" என்று கேட்டார்.

அதனைத் தொடர்ந்து ஈழத்தில் நிலவும் சாதிப் பிரச்சனைகளைப் பற்றி நெடுநேரம் பேசினார்। புலிகள் இயக்கம் சாதி அடையாளமே இல்லாமல் கட்டமைக்கப்பட்டிருப்பதாகவும், சாதி வெறியர்களுக்கு கடும் தண்டனைகள் வழங்கி வருவதாகவும் கூறி சில நிகழ்வுகளையும் கூறினார்.

அப்போது, 'தொடக்கத்தில் என்னை ஒரு கரையாளர் என்ற அளவில்தான் பார்த்தார்கள். என்னுடைய திருமணத்திற்குக் கூட எதிர்ப்பு வந்தது. இப்போது ஈழத்தில் அப்படியொரு நிலை எதுவும் இல்லை' என்று மிகுந்த உருக்கத்தோடும், கொதிப்போடும் பேசினார்.
.....
.....
இந்தத் தகவலைத்தான் கடந்த டிசம்பர் 11ம் தேதி திருச்செந்தூரில் நடைபெற்ற மீனவர் வாழ்வுரிமை மாநாட்டில் பேசினேன். உங்களில் ஒருவர்தான் அண்ணன் பிரபாகரன். அவர் மீனவ சமூகத்தின் கரையாளர் பிரிவைச் சேர்ந்தவர். எனவே, உங்கள் தாழ்வு மனப்பான்மையை உதறி எறிந்துவிட்டு, நெஞ்சை நிமிர்த்தி நடை போடுங்கள்' என்று அந்த மேடையில் பேசினேன். அதை இப்போது ஒரு மாதம் கழித்து பிரச்சினை ஆக்குகிறார்கள். ... ... "
புலிகள் மீது சுமத்தப்படும் வெள்ளாளக் கறையை போக்க விரும்புவர்கள், இந்த சந்தர்ப்பத்தில் திருமாவளவனை ஆதரிக்க வேண்டியது அவசியம். இல்லையென்றால் கேள்வி மட்டுமே கேட்கத் தெரிந்த ‘இலக்கிய தருமி’கள் விடாமல் புலிகள் மீது சேறு அடித்துக் கொண்டிருப்பார்கள்.

-மினர்வா

மேற்கண்ட கட்டுரையை இங்கும் வாசிக்கலாம் - www।keetru।com
நன்றி- கீற்று.காம்

---
புலிகள் தொடர்பான சாதிப் பூச்சாண்டி அல்லது புரளிகள்

கீற்று இணையத்தளத்தில் மினர்வாவால் எழுதப்பட்ட கட்டுரை புதிய உரையாடல்களை முன்னெடுப்பதாக அமைந்திருப்பது குறித்து மகிழ்ச்சி. விடுதலைப் புலிகளை பாசிசவாதிகள், சாதி வெறியர்கள், பிள்ளை பிடிகாரர்கள், பயங்கரவாதிகள் என்றெல்லாம் சித்தரிப்பதில் புலியெதிர்ப்பாளர்கள் வெகுவாக முயன்று அதில் ஓரளவு வெற்றியுங் கண்டிருக்கும் இக்காலகட்டத்தில் இத்தகைய உரையாடல்கள் அவசியமாகின்றன. புலிகள் தங்கள் மீதான விமர்சனங்களை எதேச்சாதிகாரப் போக்குடன் எதிர்கொள்கிறார்கள் என்ற குற்றச்சாட்டினை முன்வைத்து புலியெதிர்ப்புத் திருவிழாவை கோலாகலமாகக் கொண்டாடி வந்த புலம்பெயர்ந்த, பெயராத “அறிவுஜீவிகள்” புலிகளின் வீழ்ச்சியுடன் அதை நிறுத்திக்கொண்டிருக்க வேண்டும். ஆனால், ”ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்கமாட்டா”என்பதற்கிணங்க, அவர்களால் திடுதிப்பென்று திரையை இழுத்து மூடிவிட்டுப் போகமுடியவில்லை. ஆட்களற்ற வெட்டவெளியைப் பார்த்து தொடர்பேச்சை நிகழ்த்திக்கொண்டிருப்பதன் பின்னாலுள்ள வன்மத்தை, காழ்ப்புணர்ச்சியை, குரோதத்தை என்னவென்பது...? மணிமேகலையின் அட்சயபாத்திரம்போலும் அள்ள அள்ளக் குறையாத கோபம் அதுவெனக் கொள்ளலாகுமா? மக்களை அழித்து, அவர்தம் வாழ்வாதாரங்களை அழித்து, சிறைப்படுத்தி சித்திரவதைப்படுத்தியும் தீர்ந்துவிடாத இனவெறியால் உன்மத்தம் கொண்டு மாவீரர்களின் கல்லறைகளைச் சிதைத்து வேரும் இருக்கலாகாதென ஆழ உழுது கல்லி எறிந்த பேரினவாதிகளுக்கும் இவர்களுக்கும் இடையில் என்ன பெரிய வித்தியாசம் இருந்துவிடப்போகிறது?

புலிகள் போரிட்டார்கள். அவர்களே மாண்டுபோனார்கள். வெளியிலிருந்தபடி மக்களுக்காகப் பேசிய, “புலிகளிடமிருந்து மக்களைக் காப்பாற்றுங்கள்“ என்று பதறிய அந்த உதடுகளால் அதே வீச்சோடு இலங்கை அரசாங்கத்தைப் பார்த்து அந்தக் கேள்விகளைக் கேட்க முடியாமற் போனது ஏன்? ஆக, அதிகாரங்களை எதிர்ப்பது என்பது, “புலியதிகாரத்தை எதிர்ப்பது“என்பதனோடு முடிந்துபோகிறதா?

புலிகள் வன்னிப் பகுதியைத் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தபோது (இங்கு கட்டுப்பாடு என்பதற்கு,இராணுவ மயப்படுத்தலிருந்து விலக்கி எனப் பொருள் கொள்க।) பல தடவை நான் அங்கு போயிருக்கிறேன். நள்ளிரவிலும் பெண்கள் பயமற்றுத் திரியக்கூடிய பாதுகாப்பான ஒரு பிரதேசமாக அந்த நிலம் ஒளிர்ந்துகொண்டிருந்தது.அங்கு சாதியின் அடையாளங்கள் எதையும் நாங்கள் பார்க்கவில்லை. இயக்கத்துக்குள் இருந்த இதர போராளிகள் என்ன சாதியினர் என்பதைப் பற்றி யாரும் கேட்பதுகூட குற்றமாகக் கருதப்பட்டது. எனக்குத் தெரிந்த (சாதியும் தெரிந்த) பல போராளிகள் இருந்தார்கள். அவர்களில் அநேகமானோர் இறுதிப் போரில் மாவீரர்கள் ஆகிவிட்டார்கள். அவர்களுடைய வாழ்வு உன்னதமானது. அவர்களுக்கிடையில் இருந்த பந்தம் கண்ணீரை வரவழைக்க வைக்குமளவிற்கு நெருக்கமானது. தோழர்களை, தோழியரை தாக்க சீறிப் பாய்ந்து வந்த துப்பாக்கிக் குண்டை கணமும் தாமதியாது தங்கள் மார்பில் ஏந்தி மடிந்த துாய்மையான போராளிகள் வாழ்ந்த புனிதமான மண் அது. இவர்கள் தமிழ் திரைப்படங்களில் காட்டப்படுவதுபோன்ற, கண்ணீரை பிழிந்து கறக்க எத்தனிக்கும் பொய்மைகளல்ல. இதை நான் எவருடைய மனமாற்றத்தைக் கருதியும் எழுதவில்லை. நண்பர்களோடு ஒரு அறைக்குள் இருந்து உரையாடிக்கொண்டிருக்கும்போது, “கிரனைட்“இன் “கிளிப்“தற்செயலாக விடுபட்டுப் போக, அந்தக் கணத்தின் பயங்கரத்தை உணர்ந்து சடுதியான முடிவெடுத்து அதைத் தன் வயிற்றுப் பகுதியுள் வைத்து அதன் மீது கவிழ்ந்து வெடித்துத் துண்டு துண்டான அன்பு என்ற போராளி போன்ற பல்லாயிரம் போராளிகளால் ஆன அமைப்பு அது. அத்தகைய அன்பாளர்களுக்கிடையில் சாதி வேறுபாடுகள் நிலவியது என்பது நகைப்பிற்குரியது. இயக்கத்தில் பெரிய பொறுப்புகளை வகித்த தமிழ்ச்செல்வன், அவரது அண்ணா மூர்த்தி இவர்கள் எல்லாம் வெள்ளாளர்களா?

மேலும், வெள்ளாளர்கள் எல்லோரும் புலியெதிர்ப்பாளர்கள் அல்ல. புலியெதிர்ப்பாளர்கள் அனைவரும் தலித்துகளும் அல்ல என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும். மீனவ சமூகத்தைச் சேர்ந்தவராக தலைவர் பிரபாகரன் இருந்தபோதிலும், இயக்கத்தில் விரல்வி்ட்டு எண்ணக்கூடிய அளவு பிராமண சமூகத்தினரும் இருந்தார்கள். வெள்ளாளர்கள் இருந்தார்கள். இந்தச் சாதி என்ற மண்ணாங்கட்டிச் சீரழிவு கீழிறக்கிச் சொல்கிற பள்ளரும் பறையரும் சலவைத் தொழில் செய்கிறரும், நாவித சமூகத்தைச் சேர்ந்தவர்களும் இருந்தார்கள். மலையகத்தைச் சேர்ந்தவர்களும் முஸ்லிம்களும் கூட இருந்ததாகச் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

“சோஸ்“என்று அழைக்கப்பட்ட, இயக்க உறுப்பினர்கள் சென்று உணவருந்திய, தொலைதுார ஊர்களிலிருந்து வந்த போராளிகள் தமது வீடுகள் போல சென்று புழங்கும் பல வீடுகளில் யாரும் சாதி பாராட்டியதாக நான் அறியேன். “யார் யாரோ பெற்றெடுத்த பிள்ளைகள்“ஒரே வீட்டுக்குள் படுத்து உறங்கிக் கொண்டிருக்க, வெளியில் இருளில் இராணுவ அசுமாத்தங்கள் தென்படுகிறதாவென காவலுக்கு இருந்த யாரோ ஒருவனின் தாயை நான் அறிவேன். அந்த இரவுகள் சாதியால் களங்கப்படுத்தப்பட முடியாதன.

அதிகம் போவானேன்? எங்கள் வீடு வெள்ளாளர், கோவியர், சாண்டார், பறையர் என பல்சாதியினரும் மணம்முடித்த வீடுதான். திண்ணியமும் வெண்மணியும் அங்கு இல்லை. இந்த மாற்றத்தை ஏற்றுக்கொள்ளும் மனோபாவத்தை விடுதலைப் போராட்டமன்றி வேறேது அளித்திருக்க இயலும்?

”பறைச்சி ஆவதேதடா... பணத்தி ஆவதேதடா
இறைச்சி தோல் எலும்பினும் இலக்கம் இட்டிருக்குதோ...”

என்று மேடைகளில் மேற்கோள் காட்டிக் கூவிவிட்டு கீழிறங்கி சாதித் துண்டைத் தோளில் போட்டு நடக்கும் பொய்மையாளர்கள் அல்ல விடுதலைப் புலிகள். கூட்டு வல்லாதிக்கச் சதிகளால் அவர்கள் புதையுண்டு போயிருக்கலாம். பல்லாண்டு கழிந்த பின்பு மண்ணை முட்டி மோதி ஒரு முளை தள்ளும். சா விழுந்த முற்றங்களில் மீண்டும் பூ மலரும். மறுபடியும் எங்கள் மண்ணில் மாவீரர்கள் கல்லறைகளை எழுப்பி வணங்குவோம். கோயில்கள் என்று தனியாக வேண்டியதில்லை.



27 January 2011

தாமரையின் அரசியல் ஆற்றுப்படுத்தும் மடல்!

சீமானுக்கு - தாமரை என்கிற அற்புதமான தமிழச்சி எழுதிய அரசியல் "ஆற்றுப்படுத்தும்" மடல் படித்தேன். என் மனையிலும் பதித்து வைக்க வேண்டும் என்று விரும்பினேன். இதோ :

****************

அன்புள்ள இயக்குனர் சீமான் அவர்களுக்கு,

வணக்கம். ‘இனியவளே’ படத்தில் பாடல் எழுத வாய்ப்புக் கேட்டு உங்களை நான் சந்தித்த அந்த நாட்களை நான் திரும்பிப் பார்க்கிறேன். நீங்களும் நானும் உங்கள் குழுவைச் சேர்ந்த நண்பர்களும் மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருப்போம். அந்தப் பேச்சில் பெரும்பான்மை தமிழைப் பற்றியதாக, தமிழினம் பற்றியதாக, தமிழீழம் பற்றியதாகவே இருக்கும்.

பதின்மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இன்று நானும் நீங்களும் நிற்கும் இடம் பற்றி யோசிக்கிறேன். திரைப்படத்துறை நம் தமிழ் உணர்வுகளை எந்த விதத்திலும் குறைந்து விடவில்லை. வெற்றியோ தோல்வியோ, புகழோ பெயரோ… எதனாலும் நம் போராட்ட உணர்வு மழுங்கிப் போய்விடவில்லை. அன்றும் இன்றும் நம்மை ஒருங்கிணைத்தது, இணைப்பது மொழி- இன உணர்வும் தமிழீழ வேட்கையும்தான்!

திரைக்கலைஞர்களாக இருந்து கொண்டே தமிழீழ மக்களைக் காப்பதற்காக மற்றவர்களோடு சேர்ந்து போராடினோம். ஆவேசமான பேச்சு, கைது, சிறை என்று நீங்கள் போனீர்கள். ஒரு கட்டத்தில் நேரடியாக அரசியலில் இறங்கி ‘நாம் தமிழர்’ கட்சியை நிறுவுனீர்கள். தெளிவான சில அரசியல் கொள்கைகளின் அடிப்படையில் இயங்கினாலும் நான் எந்தக் கட்சி அல்லது அமைப்பையும் சேர்ந்தவனில்லை. எப்போதும் இப்படி இருப்பதையே விரும்புகிறேன்.

ஆனால் உங்கள் முயற்சியும் அதில் நீங்கள் கண்டுவரும் வளர்ச்சியும் எனக்கு மகிழ்ச்சியளிக்கின்றன. மொழி- இனவுணர்வு படைத்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இன்று உங்கள் பின்னால் அணிவகுத்திருக்கிறார்கள். தமிழீழத் தேசியத் தலைவரிடம் நீங்கள் கொண்டுள்ள அன்பும் பொங்கு தமிழர்க்கு இன்னல் விழைந்தால் சங்காரம் நிசமென்று நீங்கள் முழங்குவதும் உங்கள் பின்னால் அணிவகுத்து நிற்கும் இளைஞர் வரிசையை மென்மேலும் நீளச் செய்யும் என்பது உறுதி!

என் அயல்நாட்டுச் சுற்றுப் பயணங்களின்போது உலகத் தமிழர்கள் உங்கள் பால் வைத்துள்ள நேசத்தை நேரில் அறிந்து வியந்தேன், மகிழ்ந்தேன். அத்துணைப் பேரும் உங்களைத் தங்கள் உறவாகவே மதிக்கிறார்கள். உங்களிடமிருந்து நிறைய எதிர்பார்க்கிறார்கள். அவர்களின் ‘நம்பிக்கை நாயக’னாக நீங்கள் நிற்பது கண்டு வாழ்த்தி வரவேற்கிறேன்.

ஆனால், உங்கள் நலம் விரும்பிகள்… என்று சாதாரணமாகச் சொல்லமாட்டேன், உங்கள் உறவுகளை – நான் உட்பட- உரிமைச் சொந்தங்களை, அண்மையில் குழம்பித் திகைக்கச் செய்துள்ள ஒன்றை, உங்கள் முகத்திற்கு நேரே சொல்லப் பலரும் தயங்கிக் கொண்டிருக்கும் ஒரு செய்தியை- இந்த திறந்த மடல் வழியாக உங்கள் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறேன். எனக்கு அந்த உரிமை இருக்கிறது என்றே நம்புகிறேன்.

வரப்போகும் சட்டப் பேரவைத் தேர்தலில் ஜெயலலிதாவையும் அ.தி.மு.க வையும் ஆதரிக்கப் போவதாக நீங்கள் பேசியும் எழுதியும் வருவது எங்கள் நெஞ்சங்களில் ஆயிரம் இடிகளை ஒன்றாக இறக்கியுள்ளது.

நம் தமிழினத்தை அழித்து, மென்று, உமிழ்நீரால் ஊறவைத்த காங்கிரஸ் கட்சியைத் தமிழ்நாட்டில் இருந்து ஒழிக்க வேண்டும் என்று நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு சரி. ஆனால் அதற்காக அ.தி.மு.க வை ஆதரிக்கவேண்டும் என்றால் எப்படி?

யார் இந்த ஜெயலலிதா?

‘போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள்’ என்ற, காலத்தால் அழிக்க முடியாத அரும்பெரும் பொன்மொழியை உதிர்த்தவர் அல்லவா? அதுதான் அவருடைய ‘உண்மையான உள்ள வெளிப்பாடு’!

தேசியத் தலைவரைப் பிடித்து இழுத்து வந்து தூக்கில்போட ஆசைப்பட்டவர், நோய்வாய்ப்பட்ட ஐயா ஆன்ரன் பாலசிங்கம் இந்தியாவில் சிகிச்சை எடுக்க முடியாமல் மூர்க்கமாகத் தடுத்து அவர் உயிருக்கு உலையானவர், வைகோ, நெடுமாறன் உள்ளிட்ட ஈழ ஆதரவுத் தலைவர்களைப் பொடாக் கொடுஞ்சிறையில் அடைத்தவர், இப்படியெல்லாம் கொடுமைகள் புரிந்ததற்கு இன்றுவரை ஒப்புக்குக்கூட வருந்தாதவர், இன்றளவும் ராஜபட்சே புரிந்த இனப்படுகொலையைக் கண்டித்து ஒரு வார்த்தை பேசாதவர், அந்தக் கொலைகாரனுக்குச் சிவப்புக் கம்பளம் விரிக்கும் இந்திய அரசைக் கண்டிக்காதவர், தமிழர்களின் வாக்கைப் பெறுவதற்காக ‘தமிழீழம் அமைத்துத் தருவேன்’ என்று முழங்கிவிட்டு, தமிழ் மக்கள் இவர் ‘சிலநாள் மட்டும் நடிக்க வந்த புது நாடகத்தை’ நம்பவில்லை என்றதும், உண்ணாவிரதக் களைப்பு நீங்க கொடாநாடு போய்விட்டவர் – இவரையா சீமான் நாங்கள் ஆதரிக்க வேண்டும் என்கிறீர்கள்? என்ன கொடுமை இது?

உங்கள் தர்க்கப்படி பார்த்தால் இலங்கை அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபட்சேவைத் தடுக்க ரணில் விக்ரமசிங்கேவை நம் அண்ணன் பிரபாகரன் ஆதரித்திருக்க வேண்டும், அப்படித்தானே? இதைத்தான் இந்து ராம் சொன்னார், நக்கீரன் பேட்டியில் ரணிலே சொன்னார், கலைஞரும் ஆமோதித்தார். அண்ணனுக்கு அருவருப்பாகத் தெரிந்த சந்தர்ப்பவாதம் உங்களுக்கு மட்டும் தேர்தல் வியூகமாகத் தெரிவது எப்படி இயக்குனரே?

உங்கள் நிலையை சுபாஷ் சந்திரபோசோடு ஒப்பிடுகிறீர்கள். அவர் பிரிட்டனை எதிர்க்க ஜப்பானியனை நாடியதாகக் கூறுகிறீர்கள். ஆம் உண்மைதான். ஆனால் ஜப்பான் பிரிட்டனின் எதிரிநாடு! பிரிட்டனை மெய்யாகவே எதிர்த்தது, போர் புரிந்தது. களத்தில் நின்றது. எனவே போஸ் ஜப்பானிய ‘இராணுவ’த்தின் உதவியை நாடினார். இங்கே ஜெ உண்மையிலேயே காங்கிரசை எதிர்க்கிறாரா? இந்த வகையிலும் கலைஞர் செய்வதைத்தானே ஜெவும் செய்கிறார்?

தீயை அணைக்க சாக்கடையை வீசலாம். பெற்ரோலை வீசலாமா?

கலைஞரின் இனத் துரோகத்தைத் தோலுரித்துக் காட்டும் நீங்கள் ஜெயின் இனத்துரோகத்தையும் உரிக்க வேண்டாமா? அதை மன்னிக்க முடியாது என்றால் இதையும் மன்னிக்க முடியாது அல்லவா?

‘ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தாலும் தமிழர் விரோதப் போக்கில் செயல்பட்டால் எதிர்த்து முழங்குவேன்’ என்று கூறியுள்ளீர்கள். அப்படியானால் அவர் இதுவரை தமிழர் விரோதப் போக்கில் செயல்படவில்லை என்கிறீர்களா? அல்லது ‘இனி தமிழர் விரோதப் போக்கில் செயல்படமாட்டேன்’ என்று உங்களிடம் தனியாக ஏதும் உறுதியளித்திருக்கிறாரா?..

கலைஞர் காங்கிரசோடு அப்பிக் கொண்டிருப்பவர், ஜெ அதைப் பிய்த்து எடுத்துத் தான் அப்பிக் கொள்ளத் துடிப்பவர். இவர்களுக்கிடையே எதில்தான் வேறுபாடு உள்ளது – ஒருவர் வேட்டி, மற்றவர் சேலை அணிவது தவிர?

ஒருவேளை கூட்டணியில் ‘திடீர்’ மாற்றம் ஏற்பட்டு காங்கிரசுடன் அதிமுக கூட்டணி சேர்ந்துவிட்டால் உங்கள் ‘வியூகம்’ என்னாகும்? அப்போது காங்கிரசை ஒழிப்பதற்காகக் கலைஞரை ஆதரிப்பீர்களா?

‘அதிமுக ஆட்சிக்கு வந்தர்லும் சீமான் இருக்குமிடம் சிறைதான்’ என்கிறீர்கள். சரி, தமிழீழ ஆதரவாளர்களை – வைகோ, நெடுமாறன், சீமான் யாராயினும் – ஒடுக்குவதில் திமுக, அதிமுக ஆட்சிகளுக்கிடையே வேறுபாடு இல்லை என்று தெரிந்தும் அதிமுக ஆட்சிக்கு வர நாம் ஏன் உதவ வேண்டும். இப்போது அவசரமாகக் கலைஞரைப் பதவியிறக்கி, அம்மையாரை அரியணையில் அமர்த்தி நாம் சாதிக்கப் போவது என்ன? – அரசு அலுவலகங்களில் தொங்கும் படம் மாறும் என்பதைத் தவிர?

ஐந்தாண்டு கழித்து (ஜெயின் உண்மை உருவத்தைப் பார்த்து, ‘அதிர்ந்து’போய், மேடை, சிறை, வழக்கு, வாய்தாவெல்லாம் முடித்து) – அடுத்த தேர்தலில் கலைஞருக்கு ஆதரவு கேட்க மாட்டீர்கள் என்பது என்ன நிச்சயம்?

அவரை எதிர்ப்பதற்காக இவரையும், இவரை எதிர்ப்பதற்காக அவரையும் ஆதரித்து தேர்தலுக்குத் தேர்தல் கால்பந்தாக மாறி.. ஐயகோ.. அதைத்தானே இயக்குனரே, எங்கள் அன்பிற்கினிய வைகோ அவர்களும் தோழர் திருமாவளவனும் செய்து கொண்டிருக்கிறார்கள். காலங்காலமாகத் தமிழகம் இந்தக் கால்பந்து விளையாட்டைத்தானே பார்த்துக் கொண்டிருக்கிறது!

தமிழக அரசியல் என்பது ரங்க ராட்டினமாகி வெகுகாலமாகிவிட்டது. திமுகவும் அதிமுகவும் மேலும் கீழுமாகப் போய் வந்துகொண்டிருக்கின்றன. இதில் ஏறினால் மேலும் கீழுமாகச் சுற்றிச் சுற்றி, ‘தலைசுற்றிப்’ போகலாமே தவிர, வேறு ஊருக்குப் பயணம் போக முடியாது. இதை மக்கள் தெரிந்து கொண்டார்கள்… அதனால்தான் ஒரு மாற்று அரசியலை எதிர்பார்த்து தவம் கிடக்கிறார்கள்.

விஜயகாந்த் இட்டு நிரப்ப முயன்றது இந்த இடத்தைத்தான். இரு கழகங்களுக்கும் மாற்றாக அவர் இருப்பார் என்று நம்பித்தான் மக்கள் இன்றைய இடத்தை அவருக்குக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அவரும் மக்களை ஏமாற்றிவிட்டார். ஊழலற்ற நல்லாட்சி என்ற அடிப்படையில்தான் அவர் மக்களை அணுகினார். தமிழினம், தமிழர் இறையாண்மை என்ற அடிப்படையில் அணுகவில்லை. எனவேதான் காங்கிரசுக்குக் கைகொடுக்கும் நிலைக்கு நெருங்கி வந்தார். காலாவதியாகிப் போன இந்திய இறையாண்மை என்ற இறகுத் தொப்பியை அணிந்து வந்தவர் அவர். தமிழக அரசியல் வெற்றிடத்தை அவரால் நிரப்ப முடியாது என்பது நிதர்சனம்!

காங்கிரஸ் கட்சியைத் தமிழகத்தில் இருந்து ஒழிக்க வேண்டும் என்பது அவர்கள் தமிழீழத்தைச் சிதைத்தார்கள் என்பதற்காக மட்டும்தானா? இல்லவே இல்லை. இன்னும் விரிந்த நோக்கில், நம் தௌ;ளிய, நேரிய நோக்கமான ‘தேசிய இனங்களின் தன்னுரிமை, இறையாண்மை பெற்ற தமிழ்நாடு’ ஆகியவற்றின் முழுமுதல் எதிரியாகவும் இருப்பதால்தானே?

உங்களிடம் தமிழினம் என்ன எதிர்பார்க்கிறது என்பதை நீங்கள் உணரவேண்டும். ஆங்கிலேய அரசுக்கு எதிராகப் போராடுவதற்கு அன்று இந்தியத் தேசியம் தேவைப்பட்டது. இந்திய சுதந்திரத்தோடு அதன் தேவை முடிந்துபோய் விட்டது. காங்கிரஸ் கட்சி அத்தோடு கலைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் மாறாக, தமிழர்கள் உள்ளிட்ட அனைத்துத் தேசிய இன மக்களுக்கும் எதிராக வளர்ந்து, அடித்துத் தின்ன முயன்றது. ஆதனால் ‘திராவிட தேசியத்தின்’ தேவை உருவானது. திமுக அபரிதமான வெற்றி பெற்றது. ஆனால் பதவி நாற்காலியில் அமர்ந்த பின் தன் கொள்கைகளைக் கைகழுவி விட்டது. திமுக வும் எதிர்க்கட்சியான அதிமுக வும் மீண்டும் ‘இந்திய தேசியத்’தைச் தூக்கிச் சுமக்கப் போட்டியிடுகின்றன. பதவிக்காக இந்தக் கழகங்கள் போட்டுக் கொள்ளும் பங்காளிச் சண்டை காங்கிரசுக்கு மறுபிறவி கொடுத்துவிட்டது. ‘எரிவதைப் பிடுங்கினால் கொதிப்பது அடங்கும்’ என்ற அடிப்படையில் காங்கிரசைத் தமிழ்நாட்டிலிருந்து ஒழித்தால் கழகங்கள் இரண்டும் தமிழ்நாட்டை, தமிழரை முன்னிறுத்தி அரசியல் செய்ய வேண்டி வரும். அந்த நிலையை ஏற்படுத்துவதே நம் போன்றோரின் அவசரக் கடமை.

தமிழ்த் தேசியமே இன்றைய தேவை. அதை அரசியல் நிலைப்பாடாகக் கொண்டு, களம் காணும் அரசியற் கட்சிகளே இல்லை என்ற நிலையில் நீஙகள் அந்த இடத்தைப் பூர்த்தி செய்கிறீர்கள் சீமான் அவர்களே… உங்கள் பொறுப்பு பெரும் பொறுப்பு. எதிர்காலத் தமிழினத்திற்கு நீங்கள் ஆற்றும் மகத்தான கடமை!

சிங்களன் தமிழ் மீனவனை நோக்கிச் சுடும் ஒவ்வொரு தோட்டாவிலும் இந்திய இறையாண்மை பொத்தலாகிக் கிழிந்து தொங்கும் நேரம் இது! இரண்டகம் செய்யும் இரட்டையர்களான திமுக வையும் அதிமுக வையும் ஒன்றாகக் கருதி, ஒரு சேர தனிமைப்படுத்த வேண்டும். பதவி அரசியலை- சந்தர்ப்பவாதக் கூட்டணி அரசியலை மறுதலிக்க வேண்டும். தேர்தல் வரட்டும், போகட்டும். ஆனால் இந்த கொள்கை வழித் தமிழ்த் தேசியப் போராட்டத்தை முன்னெடுப்பது உங்கள் பணியாக இருக்க வேண்டும். இதை நீங்கள் செய்தால் எம்மைப் போன்ற தமிழ் உணர்வாளர்களின் ஆதரவு கிட்டும். தமிழ்த் தேசிய இயக்கங்கள் வலுவாக உங்கள் பின்னால் அணிவகுப்பார்கள். உலகத் தமிழர்கள் வலுக்கூட்டுவார்கள். நாளை அழிக்க முடியாத பெரும் அரசியல் சக்தியாக உருவெடுக்கலாம்.

அதைவிடுத்து நீங்களும் அரசியல் சதுரங்கத்தில் பகடையாக மாறி உருண்டீர்களானால், நாங்கள் பதைபதைத்துப் பார்த்து பத்தடி தள்ளி நிற்பதைத் தவிர வேறென்ன செய்வது?

நான் என்ன செய்யட்டும், பகலவன் படப்பிடிப்பை இப்போதே நடத்தலாமா என்று நண்பர்களைக் கேட்கிறீர்கள். சரி என்னுடைய யோசனையைச் சொல்கிறேன்.

ஐந்து ஆண்டுகளுக்குத் தேர்தலில் நிற்க வேண்டாம். ஊர் ஊராகச் சென்று ‘நாம் தமிழர்’ கட்சி அமைப்பை வலுப்படுத்துங்கள். தமிழ்த் தேசியச் சிந்தனையை மக்களிடம் வலுவாக வளர்த்தெடுங்கள். காங்கிரஸ் நிற்கும் தொகுதிகளில் மட்டும் எதிர்த்துப் பரப்புரை செய்யலாம்.

இல்லை, இந்தத் தேர்தலிலேயே நின்றாக வேண்டும் என்றால், நல்லது, காங்கிரஸ் நிற்கும் தொகுதிகளில் மட்டும் போட்டியிடுங்கள். காங்கிரசை எதிர்த்துத் தோற்கடிப்போம்.

மற்றத் தொகுதிகளில் ‘திமுக வும் அதிமுக வும் ஒன்றே’ என்ற நிலைப்பாட்டை எடுங்கள். ’49 ஓ’ வுக்குக் குரல் கொடுங்கள். அது உங்களுக்கு உடன்பாடு இல்லை எனில், யார் வென்றால் என்ன, அந்தத் தொகுதிகளைப் பற்றி கவலையில்லை என்று முடிவெடுங்கள்.

இலங்கைப் புறக்கணிப்பை வலுவாக மேற்கொள்வோம். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயல்பாடுகளைத் தமிழகத்தில் கொண்டு வருவோம். தமிழீழமும் தமிழ்நாடும் ஒன்றாக விடியல் காணட்டும்!



இதையெல்லாம் செய்தபின் பகலவனுக்காகவும் நேரம் ஒதுக்கினால், நல்லது.. சொல்லியனுப்புங்கள், நானும் வந்து பாடல் எழுதுகிறேன்.

திரை அதிர, தமிழனின் சிறை உடைப்போம்!

என்றும் அடங்கா தமிழ்த் தாகத்தோடு

உங்கள்

தாமரை

20.01.2011

சென்னை 24

(நன்றி- கீற்று )

குறிப்பு:

"ஜெயலலிதா தமிழ்நாட்டின் அமாவாசைதான் - கலைஞரே! ஆனால் நீங்கள் அமாவாசைக்கு அடுத்த நாள்!"

- அறிவார்ந்த தன்மையுடன் பேசுவது என்பது என்னவோ தனக்கு மட்டுமே வாய்த்த வரம் என்று ஆணவமாகத் திரியும் கருணா(நிதி)க்கு - தாமரை வீசிய சவுக்குச் சொற்கள் இவை!

15 January 2011

அடியே அனார்கலி!

அடியே அனார்கலி!
உனக்குப் பிறகு
இங்கு உயிரோடு புதைக்கப்பட்டது
'தமிழனின் தன்மானம்' தானடி!